நீர் மூலம் ரிஷிமூலம், நதிமூலம் இரண்டும் கேட்கக் கூடாதென்று சொல்வார்கள். வேறு வழியில்லை நாம் இப்போது கேட்டுதான் ஆகவேண்டும். நமது பூமியை செயற்கைக்கோளிலிருந்து பார்த்தால் பூமியில் எங்கும் நீர் நிறைந்திருப்பது போலதான் தோன்றும். அது உண்மைதான். ஆனால் அது கடல் நீர், அள்ளிப்பருகினால் வாய் ஓரங்கட்டும். கடல் நீரையும் சேர்த்து நமது பூமியில் உள்ள மொத்த நீரின் அளவை விஞ்ஞானிகள் விஜயகாந்த் போல புள்ளிவிவரமாக பிரித்து மேய்ந்திருக்கிறார்கள். அந்த புள்ளிவிவரத்தை சற்று பார்க்கலாம். நமது பூமிப்பந்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் நீரில் 96.5 % கடல் நீர்தான். அது நமக்கு குடிக்க உதவாது. இன்னும் 1% அமில நீர். அதையும் நாம் பயன்படுத்த முடியாது. இந்த புள்ளிவிபரத்தைக் கேட்டதும் பாதிபேருக்கு புரையேறியிருக்கும். இன்னும் கேட்டால் சற்று மயக்கம் வந்தாலும் ஆச்சரியமில்லை. கடல்தண்ணீர் போக மீதியிருக்கும் 2.5% தான் நாம் பயன்பாட்டுக்குத் தகுந்த நல்ல நீர். இப்போது நாம் நல்ல நீரை மட்டும் கணக்கில் கொள்வோம். 100% நல்ல நீரில் 69% அண்டார்டிகா போன்ற பகுதிகளில் உறைந்து கிடக்கிறது, 30% நிலத்தடியில் இருக்கிறது, 1% தான்...