வாக்குத் தவறானால்?

தனது வாழ்நாளில் அன்றுதான் கடைசிநாள் என்பதை உணராமல் அவன் நாட்டியத்தைக் கண்டுகளித்துக் கொண்டிருந்தான். அவன் ரசிப்பது நாட்டியத்தையா அல்லது நடன மங்கைகளையா என்ற கோபம் அவன் மனைவிக்கு. தனிமையில் இருந்திருந்தால் தவறைச் சுட்டிக்காட்டி இடித்துரைக்கலாம். ஆனால் நாடாளும் அரசனை அவை முன்னிலையில் எவ்வாறு கடிந்துகொள்வது? தான் கோபத்திலிருக்கிறேன் என்றுணர்த்த விருட்டென்று எழுந்து சென்றாள் அவள். கோப்பெருந்தேவி கோபப்பெருந்தேவி ஆனாள். அவள் விருட்டென்று போனதும் சுருக்கென்று புத்தியில் உரைத்தது அவனுக்கு. இல்லாளின் உள்ளம் குளிரச்செய்யும் வழியறியாது அரியணை என்னும் தீயில் அமர்ந்திருந்தான் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன். ஆரியர்களைக் கதறவிட்ட நெடுஞ்செழியனுக்கும் மனைவியென்றால் உதறலெடுக்கும் போலும். காணாமல் போன கால்சிலம்பை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்பது, கோப்பெருந்தேவிக்கு ஏற்கனவே கிடப்பில் கிடக்கும் கோபம். அந்த நாட்டுக்கே அவன் அரசனென்றாலும், அந்தப்புரத்தில் புருசன் என்ற பதவி மட்டுமே செல்லுபடியாகுமா? இதில் அரசனுக்குக்கூட விதிவிலக்கு இல்லையா? நாட்டிய மங்கைகளும், நாடாளும் நங்கையும் அவன் மனதை சற்றுத் தடுமாறச் செய...