சம்பிரதாயங்களும் சினிமாப் பாடல்களும்
நல்ல நாட்கள், கெட்ட நாட்கள் என்று அனைத்துக்குமே நாம் சில சடங்குகள், சம்பிரதாயங்களைப் பின்பற்றுவோம். அந்த சடங்குகள் வரிசையில் காலப்போக்கில் பல புதிய பழக்கங்கள் இணைந்துகொள்வது இயல்பு. அந்த வகையில் திருமணம், கோவில் திருவிழாக்கள் போன்றவற்றில், சில குறிப்பிட்ட திரைப்படப் பாடல்கள் இடம்பெறுவதுண்டு. எனது ஊர் முள்ளக்காடு, தூத்துக்குடிக்கு அருகில் இருக்கும் கிராமம். எனது கிராமத்தில், இது போன்ற நிகழ்ச்சிகளில் தவறாமல் இடம்பெறும் சில பாடல்களை சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். இது எனது ஊரில் மட்டுமல்லாது, அந்த வட்டாரத்தில் பின்பற்றப்படும் வழக்கம். தூத்துக்குடி பக்கம், பொதுவாக, நிச்சயதார்த்தம், திருமணம் எல்லாம் பெண் வீட்டில் நடப்பது மரபு. பெண்வீட்டில் நிச்சயதார்த்த நாள் அன்று, "மரகதவல்லிக்கு மணக்கோலம், என் மங்கலச்செல்விக்கு மலர்க்கோலம்" என்ற பாடல் ஒலிக்கும். "அன்புள்ள அப்பா" என்ற படத்தில் இடம்பெற்ற பாடல். அந்தப் பாடலைக் கேட்டாலே, பெண்ணின் தந்தைக்கு கண்ணீர் வந்து விடும், அவ்வளவு உருக்கமான பாடல் அது. திருமணத்தில் மணமகளை மேடைக்கு அழைத்து வரும்போது "வாராய் என் தோழி...